172

22வாளாதி வயங்கிழாய் வருந்துவ னிவளென
(1) நாள்வரை நிறுத்துத்தாஞ் சொல்லிய பொய்யன்றி
(2) மீளிவேற் றானையர் புகுதந்தார்
நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே

எ - து: பயனிலகூறாதேகொள். விளங்கின இழையினையுடையாய்! பொய்யன்றித் (3) தாஞ்சொல்லிய நாளெல்லைவருதற்கு இன்னுஞ்சிறிதுநாட் செல்லுமென்று தூக்கி அத்துணையும் ஆற்றாது இவள் வருந்துவளென்று கருதிக் (4) கூற்றுவனையொத்த வேற்படையினையுடையவர் புகழ் வளர்கின்ற உயர்ந்த கூடலிலேநெடிய வெற்றிக்கொடிகளைக் கட்டும்படியாகப் புகுந்தார்காண்; 1எ - று.

நிறுத்தென்றது, தூக்கியென்னும்பொருட்டு.

"கிழவி நிலையே வினையிடத் துரையார், வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்" (5) என்பதனால் (6) உருவுவெளிப்படுதலின் இவளென்றான்.

"நிலனொருங்கு 2மயங்குத லின்று" (7) எனவே காலம் இரண்டும் மயங்குமென்றலின் முன்பனியும் பின்பனியும் மயங்கிற்று.

இது சுரிதகம்.

இதனால், தலைவிக்குப் புணர்வாகிய உவகை பிறந்தது

இஃதுஎட்டடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான்கடிச் சுரிதகமும் பெற்று வந்த ஒத்தாழிசைக்கலிப்பா. ( 30 )

(32). (8) எஃகிடை தொட்டகார்க் கவின்பெற்ற வைம்பால்போன்
மையற விளங்கிய துவர்மண லதுவது

1. இவ்வடி முற்றும் கலி. 33 - வது செய்யுளிலும் 29 - ஆம் அடியாக வந்துள்ளது. இங்குள்ள இவ்வடியுரையுடன் "அச்சிர, முந்து வந்தனர் நங்காத லோரே" ஐங். 223. என்பது ஒப்புநோக்கற்பாலது.

2. "சூழவன் பதாகை கட்டித் தோரணம் பலவு நாட்டி,
யேழுயர் மாட மூதூ ரெங்கணுங் கோடித் தாரே" வில்லி. நிரை. 118.

3. தலைவர், தாஞ்சொல்லிய நாளெல்லை வருதற்கு முன்பு வருதலுண் டென்பது, ஐங். 42 - ஆம் பத்தாலுணரப்படும்.

4. "காலவேல்" சீவக. 999, 2935. "காலவேலான்" கம்ப. கையடை. 11.

5. தொல். கற். சூ. 45.

6. உருவு வெளிப்படுதல். ஐங். 418.

7. தொல். அகத். சூ. 12.

8 இச்செய்யுள், தனிச்சொல்லும் அடக்கியலுமின்றி அடிநிமிர்ந் தொழுகியதற்கும் (தொல். செய். சூ. 155. பே.) "எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றிய கொச்சகத்திற்கும் (தொல். செய். சூ. 155. நச்.) மேற்கோள்.

(பிரதிபேதம்) 1 எனஆற்றுவித்தாள், 2 மயங்குதலிலவெனவே.